இந்தியாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான டி மார்ட், தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில், டி மார்ட் நிறுவனத்தின் வருவாய் 10337 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் வருவாயை விட 20% உயர்வாகும்.
நிறுவனத்தின் வருவாயில் கணிசமான அளவு உயர்வு பதிவான போதும், இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் 4% வரை சரிவை சந்தித்தது, டி மார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, நேற்றைய 3656 ரூபாயிலிருந்து இன்று 3499.8 ஆக குறைந்துள்ளது. மேலும், கடந்த ஒரு வருடத்தில், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. வருவாய் உயர்ந்த போதும் பங்கு மதிப்பு சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.