திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடைபெற்று வரும் திமுகவின் உட்கட்சித் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி காலமானதையடுத்து, 2018ஆம் ஆண்டில் திமுக தலைவராக அக்கட்சியினரால் ஒருமனதாக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.