கென்யாவில் வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடைபெற்றதால் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கென்யாவில் வரி உயர்வு குறித்த நிதி மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு வண்ண ஆடை அணிந்து நாடாளுமன்றத்தை நோக்கி மக்கள் பேரணியாக செல்கின்றனர். இணையத்திலும் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர். இந்த மசோதாவை நிராகரிக்க வலியுறுத்தி எம்பிக்களுக்கு தொலைபேசி வாயிலாக நெருக்கடி ஏற்படுத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் இவர்களை விரட்டியடித்தனர். தெருக்களில் இதனால் பல கடைகள் மூடப்பட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு நகரங்களில் இது போன்று போராட்டம் நடைபெற்று வருவதால் சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உணவுப் பொருளான பிரெட்டுக்கான வரியும் அடங்கும். வரி விதிப்பு நடவடிக்கைகளால் கென்யாவின் பொருளாதார சூழல் மோசமாக உள்ளது.