பாலைவன நகரமான துபாய் வரலாறு காணாத மழையை சந்தித்துள்ளது. இந்த மழைக்கு மேக விதைப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
குறைவான மழைப்பொழிவு ஏற்படும் நாடுகள் செயற்கையாக மேக விதைப்பு என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மழை பொழிவை தூண்டுகின்றன. இதன் மூலம், நீர்த் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மழைப்பொழிவு ஏற்படுத்தும் நாடுகளில் அமீரகமும் ஒன்று. கடந்த 1982 முதல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமீரகத்தில் மழை பொழிவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அமீரகம் தவிர, சவுதி அரேபியா, ஓமன் போன்ற வளைகுடா நாடுகளும் இந்த முறையை பின்பற்றுகின்றன. இதற்கு, ஹெலிகாப்டர்கள் மூலம் மேகங்களில் சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, டைட்டானியம் ஆக்சைடு போன்ற ரசாயன பொருட்கள் விதைக்கப்படுகின்றன. இவை செயற்கை மழையைத் தூண்டினாலும் இதில் பல்வேறு பக்க விளைவுகள் உள்ளன. ஓரிடத்தில் பெய்ய வேண்டிய மழை மற்றொரு இடத்தில் மிகுதியாக பெய்கிறது. இதனால் வேறொரு பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. எனவே, சூழலியல் ஆர்வலர்கள் மேக விதைப்பு நடவடிக்கையின் நீண்ட கால பாதிப்பாக துபாய் பெருமழை இருக்கலாம் என கூறுகின்றனர். மேலும், இயற்கையின் எச்சரிக்கையாக இதனை கருதுகின்றனர்.