சென்னையில் ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு சொந்தமான Oceanic Edible International Ltd என்ற உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் நிறுவனர்கள் பல்வேறு வங்கிகளில் ரூபாய் 104 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த கடன்களால் ரூபாய் 225 கோடி வரை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் கடன் பெற்ற தொகை மூலம் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம், பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் சிபிஐக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று சென்னையில் அமலாக்கத்துறை திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளது. சென்னையில் கோடம்பாக்கம், அமைந்தகரை, வேளச்சேரி, மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில் இந்த சோதனை இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் 9 முதல் 10 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நிறுவனம் வேறு எந்தெந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்துள்ளது, எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்து வருகிறது, கணக்கு காட்டப்படாத வகையில் எவ்வளவு பணங்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.