கொப்பரைத் தேங்காய் கொள்முதலை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி 1முதல் ஜூலை 31 வரை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி உட்பட 21 மாவட்டங்களில் 12,300 விவசாயிகளிடம் 14,800 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், 6 மாதங்களுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் வெளிச்சந்தையில் கொப்பரைத் தேங்காயின் விலை கணிசமாகக் குறைந்தது. தமிழக தென்னை விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக 21 மாவட்டங்களிலும் உள்ள 46 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரையை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் அரசு நிர்ணயித்துள்ள தரத்துக்கேற்ப, நன்கு உலரவைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம் பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வரவேண்டும். பந்து கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.110-க்கும், அரவை கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.105.90-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.