சீன எல்லை பகுதிகளில் தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அரசியல் அதிகாரிகளுக்கு அதிபர் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வில் பேசிய அவர், கட்சியின் செயல்பாடுகளை எல்லைப் பகுதிகளிலும் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார். "சீனாவின் நவீன திட்டங்களை எல்லையில் செயல்படுத்தி, தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார். மேலும், சீன மொழியை எழுத்து மற்றும் பேச்சு வடிவங்களிலும் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இது ஒருங்கிணைந்த பாடப்புத்தகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எல்லை பகுதிகளில் உள்ள நிர்வாக சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில், சுதந்திரமான சீன அறிவுசார் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.