முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணத்தில் சிறிய அளவு உயர்வு எதிர்பார்ப்பு.
ஆதார் அட்டை தொடர்பான சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் புதிய கட்டண மாற்றம் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. (UIDAI) இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்படலாம். அதேபோல் புகைப்பட மாற்றம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகள் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் வங்கி பரிவர்த்தனை, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஆதார் அட்டை அடையாள ஆவணமாக பயன்படுகிறது. எனவே, கட்டண உயர்வு நேரடியாக மக்களை பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அது மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.