தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்படும் சாலைகளில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. ஒப்பந்த விதிகளின்படி, ஆண்டுதோறும் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சில சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில், நள்ளிரவு முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தி அமல்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன்களுக்கு பல முறை பயண கட்டணம் ரூ.155 இருந்து ரூ.160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், லாரி, பஸ், கனரக வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.70 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறி, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.














