சென்னை விமான முனையத்திற்குள் நுழைய ஜனவரி 16 முதல் கைரேகை முறை அமலுக்கு வரவுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமான முனையத்திற்குள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன் கூடிய உள்ளே நுழைவதற்கான தனி அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதி அட்டையுடன் கைவிரல் ரேகை பதிவும் தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ஜனவரி16ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் கைரேகை பதிவு செய்யும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் 100 சதவீதம் முடிவடைந்து புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.