சிவகாசி பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் .வழக்கமாக தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது திடீரென்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குடோனில் அடைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த மாரியப்பன் மற்றும் முத்து முருகன் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்