சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காசா போரினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சம் ஏற்பட்டு காசா நிலை மிகவும் மோசமாக உள்ளது வடக்கு காசாவில் வான் வழியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் தவித்து வருவதாக ஐநா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாலை வழியாக உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல சமையல் நிபுணர் ஜோஸ் அண்ட்ரேஸ் காசாவிற்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்தார். அவருடைய அறக்கட்டளை மூலம் உணவு பொருட்கள் சேகரித்து வைத்துள்ளார். இதுவரை சுமார் 200 டன் உணவு பொருட்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த உணவு பொருட்களை கப்பல் மூலம் காசாவுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று உணவு பொருட்களுடன் சைப்ரஸ் நாட்டில் இருந்து கப்பல் புறப்பட்டு உள்ளது. இது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் காசா சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உதவி பொருட்களை வழங்க காசா அருகே கடல் பாலம் அமைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தப் போரினால் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.