ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சொந்த நாடு திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜி 20 மாநாடு நிறைவடைந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அவரது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில், அவரை கனடா அழைத்துச் செல்ல, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானம் ரோம் வழியாக வருவதாக இருந்த நிலையில், லண்டனுக்கு திசைமாற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்துச் செல்வதாக இருந்த ராயல் கன்னடியன் விமானப்படைக்குச் சொந்தமான சி சி 150 போலரைஸ் விமானம், திசை மாற்றி விடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலையில், தாமதப்படுத்தப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் பயணம், நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிசி செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.