சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறு காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை வந்த 3 விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் வந்த 7 விமானங்கள், சென்னையில் நிலவிய பனிமூட்டத்தால் வானில் நீண்டநேரமாக வட்டமடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின.
சென்னையில் இருந்து புறப்படும் ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. பனிமூட்டம் விலகியதும் மீண்டும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.