சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகபடுத்தப்படுகிறது.
சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டத்தில் சென்னை முழுவதும் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய கூடிய ஒரே இ-டிக்கெட் முறையை அறிமுகம் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த தனி செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியில் புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளின் முழு விவரத்தையும் பதிவு செய்யவேண்டும். மொத்த தொகையை செலுத்திய பின்னர் அந்த நாள் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பயண முறைகளில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என 3 விதமான போக்குவரத்தில் பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.