சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் 12 சர்வதேச விமானங்கள் உட்பட 22 விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 27ஆம் தேதி வரை மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 22 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சில விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.