உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குருகிராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவின் மறைவிற்கு கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக முலாயம் சிங் யாதவ் திகழ்ந்து வந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏவாகவும், மாநிலத்தின் பல மக்களவை தொகுதிகளில் எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். 1989-91, 1993-95, 2003-2007 என மூன்று முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 1996-98 காலகட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1992ல் சமாஜ்வாதி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். ஒருகட்டத்தில் முலாயம் சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் மற்றும் மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு இடையில் கட்சியை வழிநடத்துவது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. அப்போது அவர், தனக்கு பின்னர் மகன் அகிலேஷ் யாதவ் என்று கூறி கட்சியை அவரது கையில் ஒப்படைத்துவிட்டார். தற்போது சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் பதவி வகித்து வருகிறார்.