மியான்மரில் 2021 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆம் சாங் சுகி, அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டதால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அவ்வப்போது ஆங்காங்கே கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் ராணுவ தளபதி மின் ஆங் கலந்து கொண்டார். அப்போது அங்கே புத்த மடாலையும் அருகே மர்ம நபர்கள் ராக்கெட் வெடிகுண்டு வீசினர். இதில் மடாலயம் மற்றும் உணவகம் இடிந்து போயின. இந்த தாக்குதலையடுத்து அங்கிருந்தவர்கள் பயந்து நாலாபுறமும் ஓடினர்.
இந்த தாக்குதலில் இரண்டு புத்த மத துறவிகள் உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.