ப்ரீ பையர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த அமுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை. எனது மகளுக்கு அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ப்ரீ பையர் விளையாட்டு விளையாடும் பழக்கம் உள்ளது. அப்போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் அவளை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற போது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர். தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.
ப்ரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால், பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம். பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்த விதமான இடையூறும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.