கனடாவில் உள்ள பிராம்டன் பகுதியில் பிரபலமான கௌரிசங்கர் மந்திர் என்ற இந்து ஆலயம் அமைந்துள்ளது. இதனை சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) மற்றும் இதர காலஸ்தான் அமைப்புகள் சேதப்படுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா மீதான எதிர்ப்புகள் நிறைந்த வாசகங்களை அவர்கள் கோவிலின் சுவர்களில் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் சுவர்களில் ஸ்பிரே பெயிண்ட் கொண்டு இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். கடந்த ஜூலை மாதம் தொடங்கி இதுவரை 3 இந்து கோயில்கள் கனடாவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசிய இந்திய தூதரக அதிகாரி, "இந்தியர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது" என கூறியுள்ளார். மேலும், கனடாவைச் சேர்ந்த எம் பி சந்தன் ஆச்சாரியா, "கனடாவில் இந்தியா எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் இதனை கவனிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.