ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிட்டுள்ளது. அதன்படி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி, அவர் இந்த இடத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்தியர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, முகேஷ் அம்பானியை விட கௌதம் அதானியின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்து, தரவரிசைப் பட்டியலில் அவர் முன்னேறிச் சென்றார். விரைவில் உலகின் இரண்டாவது பணக்காரராக அதானி ஆவார் என்று கணிக்கப்பட்டது.
அந்த வகையில், வியாழக்கிழமையின் பங்குச் சந்தையில், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பசுமை எனர்ஜி, அதானி துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் போன்ற அதானி குழுமத்தின் பங்குகள் 3.45 முதல் 4.97% வரை ஏற்றம் கண்டன. இதன் விளைவாக, அவரது சொத்து மதிப்பு 40000 கோடி ரூபாய் உயர்ந்தது. அதனால், இன்று அவர் உலகின் இரண்டாவது பணக்காரராகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
டெஸ்லா குழுமத்தின் தலைவர் எலான் மஸ்க் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை கவுதம் அதானி வகிக்கும் நிலையில், பெர்னாட் அர்னால்ட் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் பில்கேட்ஸ், வாரன் பஃபெட், முகேஷ் அம்பானி, லேரி பேஜ் ஆகியோர் உள்ளனர். ஆனால், ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில், கௌதம் அதானி, தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.