எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது இருப்பை நிலை நிறுத்தவும், விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, சர்வதேச அளவில் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான செமி கண்டக்டர் கொள்முதலை டாடா எலக்ட்ரானிக்ஸ் வழங்கும் என கருதப்படுகிறது.
செமி கண்டக்டர் உற்பத்தி துறையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் முக்கிய முன்னேற்றங்களை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, ஓசூர், தோலாரா மற்றும் அசாம் பகுதிகளில் உற்பத்தி ஆலைகளை நிறுவி உள்ளது. இதுவரை 14 பில்லியன் டாலர்கள் தொகையை முதலீடு செய்துள்ளது. அந்த வகையில், டெஸ்லா நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் முக்கியமாக கருதப்படுகிறது.