வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்ட கண்ணாடி தொங்கு பாலம், அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.
39 ஏக்கர் பரப்பிலான வில்லிவாக்கம் ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. மாசுபட்டுக் கிடந்த இந்த ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையில் முதல் முறையாக கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த தொங்கு பாலம் 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் ரூ.8 கோடிசெலவில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த சேவை அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினர்.