முறையற்ற மற்றும் தவறான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் மீது தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்திய வணிகப் போட்டி கண்காணிப்பு ஆணையம் (காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா - சிசிஐ) விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், தற்போது, கூகுள் நிறுவனத்துக்கு 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 20 ம் தேதி, கூகுள் நிறுவனத்திற்கு 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு அறிதிறன் பேசிகளில், முதன்மை பெறும் நோக்கில், முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளது. இதனை சிசிஐ தனது விசாரணையில் உறுதி செய்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான உரிமம் பெற்ற இயங்கு தளங்கள், மறைமுகமாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்கு தளங்களை பயன்படுத்தியது இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், பிற இயங்குதளங்களில் கூகுள் ஆதிக்கம் செலுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூகுள் பிளே ஸ்டோர் தளங்களில் தனக்குள்ள அதிகார நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு 936.44 கோடி அபராதத்தை சிசிஐ விதித்துள்ளது.அத்துடன், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கூகுள் நிறுவனம் கைவிட வேண்டும் என்று சிசிஐ வலியுறுத்தி உள்ளது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.