வாட்ஸ்அப் செயலி, கைபேசி பயன்படுத்தப்படாத நிலையிலும் அதன் மைக்ரோஃபோன் கருவியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தனி உரிமை கொள்கைகளை மீறியது போல் ஆகும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் பயனர் ஒருவர், ட்விட்டரில், தான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது கைபேசி மைக்ரோஃபோன், வாட்ஸ்அப் செயலியால் பயன்படுத்தப்பட்டதாக பதிவிட்டு, 'என்ன நடக்கிறது?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு ட்விட்டர் வாயிலாக பதில் அளித்த அமைச்சர், "இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நிகழ்ந்துள்ள உரிமை மீறல். இது தொடர்பாக விசாரணை செய்து தகவல் அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி, வாட்ஸ் அப்பில் நிகழும் உரிமை மீறல் குறித்து, "வாட்ஸ்அப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது" என்று எலான் மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்விட்டர் செய்தி, இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு செயலிகளின் தனி உரிமை கொள்கைகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.