பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்த கட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளன” என்று தெரிவித்தார். அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி வரவிருக்க, அதற்கு முன்னதாக செப்டம்பரில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இம்மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை கணிசமாகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கார்கள், SUV-க்கள், இருசக்கர வாகனங்களை 18% ஜிஎஸ்டி வரி பிரிவின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கார்கள், பைக்குகள் மீது 28% வரியும், SUV-க்கள் மீது 50% வரியும் உள்ளது. எனவே, புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால் வாகனங்களின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.