ஹமாஸ் இஸ்ரேல் இடையே நடைபெறும் போருக்கு முடிவு கட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ் முன்வைத்துள்ளது.
முன்னதாக கத்தார் மற்றும் எகிப்து போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை முன்மொழிந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் முன் வைத்துள்ளது. இதன்படி நான்கரை மாதங்களுக்கு போர் நிறுத்தம் நீடிக்க ஹமாஸ் வலியுறுத்துகிறது. அதாவது சுமார் 135 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய அது வற்புறுத்துகிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலை சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை ஹமாஸ் விடுதலை செய்யும். அதற்கு நிகராக இணையாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1500 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள ஆண் பிணை கைதிகளை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைக்கும். மூன்றாம் கட்டமாக உயிரிழந்த பிணை கைதிகளின் உடல்கள் வழங்கப்படும் என ஹமாஸ் உடன்படிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு மூன்றாம் கட்டத்தின் முடிவில் இரு தரப்பினரும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கைகளை வகுக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு எதிர்பார்க்கிறது. இந்த போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் காசாவை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் மறு கட்டுமான பணிகள் துவங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்தின் போது உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிகமான அளவில் காசாவிற்குள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது வரை இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேல் பிரதமர் இதனை நிராகரித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் காசாவை முழுமையாக வெற்றி அடைவோம் என்று அவர் கூறியுள்ளார்.