ரயில்வே துறையில் பயன்படுத்தப்படும் கையடக்க கருவியால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் 'பெர்த்' எனப்படும் இருக்கை வசதி பயணியருக்கு ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
பொதுவாக ரயில் பயணத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக இருக்கைகள் பதிவு தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். இதற்கு பிறகு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட்கள் அல்லது பயணம் மேற்கொள்ளாத பயணியரின் இருக்கை டிக்கெட் பரிசோதகர் முதலில் வருவோருக்கு ஒதுக்குவார்.
இந்த முறையில் எச்.எச்.டி., எனப்படும் கையடக்கக் கருவி பயன்படுத்தப்படுகிறது. தற்போது 1,390 ரயில்களில் 10 ஆயிரத்து 745 கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகள் ரயில்வே முன்பதிவு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் இருக்கைகள் காத்திருப்போர் பட்டியலில் முதலில் உள்ளவர்களுக்கு தானாகவே ஒதுக்கப்படும்.
இதன் மூலம் கடந்த நான்கு மாதங்களில் தினமும் 7,000க்கும் மேற்பட்ட ஆர்.ஏ.சி., மற்றும் 'வெயிட்டிங்லிஸ்ட்' பட்டியலில் இருந்தோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த வசதி நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன் பின், காகிதத்தின் பயன்பாடு பெருமளவு குறைந்துவிடும்.