இந்தியாவின் பிரபல முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், மின்சார வாகனங்கள் தயாரிப்பிற்காக அமெரிக்காவின் ஜீரோ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்காக 490 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதற்கு, ஹீரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது குறித்த அறிக்கையை ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "ஹீரோ நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்புக்காக அமெரிக்காவின் முன்னணி பிரீமியம் வாகனத் தயாரிப்பாளரான ஜீரோ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளது. அந்த நிறுவனத்தில் சுமார் ஆறு கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பங்கு முதலீடு செய்ய உள்ளது. அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் இதே ஆறு கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ நிறுவனம், மின்சார வாகனத் துறையில் ஈடுபடுவதற்காக, பல நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகிறது. அதன் மூலம், அந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஏத்தர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை ஹீரோ நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், தற்போதைய ஜீரோ நிறுவனம் மீதான முதலீடு, ஹீரோ நிறுவனத்தின் மின்சார வாகனத் தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.