பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி சூழலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு தொழில்துறையினர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், விநியோகச் சங்கிலியில் பல்வேறு தடங்கல்கள் எழுந்துள்ளதால், தனது பாகிஸ்தான் ஆலைகளை மூடுவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ஆலைகள் மூடப்படுவதாகவும், நாட்டின் நிதி நெருக்கடியே இதற்கான முக்கிய காரணம் எனவும், ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்திற்கு முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சுசுகி மோட்டார்ஸ், டொயோட்டாவின் பாகங்களை தயாரிக்கும் இண்டஸ் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடியது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்நாட்டில் வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானின் நிதி நெருக்கடி, வாகனத் துறையை வெகுவாக பாதித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.