தமிழ்நாட்டில் உள்ள தனது உற்பத்தித் தொழிற்சாலையில், 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தும் இலக்கை நோக்கி ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) ஒரு பெரிய அடியை எடுத்துள்ளது. இதற்காக, 75 MW சோலார் ஆலை மற்றும் 43 MW காற்றாலை மின் நிலையம் ஆகிய இரண்டையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை போர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் (FPEL) உடன் இணைந்து செயல்படுத்துகிறது. இந்த கூட்டு முயற்சியில், HMIL 26% பங்கையும், FPEL 74% பங்கையும் வைத்திருக்கும்.
இந்த திட்டத்திற்காக HMIL ரூ.38 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்து கொள்ளும். தற்போது, HMIL தனது ஆற்றல் தேவைகளில் 63% ஐ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவே பெறுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் 2025-ஆம் ஆண்டுக்குள் 100% இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் உலகளாவிய முயற்சியான RE100 உடன் இணைந்ததாகும். இந்த ஆலைகள் ஆண்டுக்கு 25 கோடி யூனிட் சுத்தமான ஆற்றலை உற்பத்தி செய்யும் மற்றும் 2 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும்.














