ரஷியாவிலிருந்து வாக்னர் குழு தலைவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
உக்ரைன் மீதான போரில் ரஷியாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை செயல்பட்டு வந்தது. இந்த கூலிப்படை திடீர் திருப்பமாக ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும், தங்கள் படையைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றுவிட்டது என்றும் குற்றம்சாட்டியது. ரஷிய படைகள் மீது வாக்னர் குழுவும், அவர்கள் மீது ரஷிய வீரர்களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரஷியாவுக்கு எதிரான வாக்னர் குழுவின் திடீர் புரட்சி உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டது. ரஷியா கேட்டுக்கொண்டதன் பேரில், அதன் நட்பு நாடான பெலாரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து பிரிகோசின் தனது வீரர்களை மீண்டும் உக்ரைனில் உள்ள கள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் வாக்னர் குழு தலைவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.