மெட்ரோ ரயில்களை சுத்தம் செய்வதற்காக தானியங்கி ரயில் கழுவும் ஆலையை மெட்ரோ நிறுவன இயக்குநர் திறந்து வைத்தார்.
விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் மெட்ரோ ரயில்களின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கான தானியங்கி ரயில் கழுவும் ஆலை மற்றும் மெட்ரோ ரயில் பராமரிப்புக்கான மொபைல் லிஃப்டிங் ஜாக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி திறந்து வைத்தார். தானியங்கி ரயில் கழுவும் ஆலை விம்கோ நகர் பணிமனை மெட்ரோவில் உள்ள உயர்மட்ட பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த துப்புரவு அமைப்பு சோப்பு கரைசல், உயர் அழுத்த நீர் ஜெட் மற்றும் சுழலும் தூரிகைகளைப் பயன்படுத்துகிறது. 4 பெட்டிகளை கொண்ட ஒரு மெட்ரோ ரயிலை சுத்தம் செய்வதற்கு, 2000 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அதில் 1600 லிட்டர் (80%) தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மெட்ரோ ரயிலை சுத்தம் செய்வதற்கு தோராயமாக 10 நிமிடங்கள் ஆகும்.