இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை வெளிநாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையுடன் இணைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படி, முதல் முறையாக, இந்தியாவின் யுபிஐ தளம் சிங்கப்பூரின் பே நௌ தளத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், இரு நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைத்தளங்களும் இணைக்கப்பட்டு, எல்லை தாண்டிய முறையில், தடை இல்லா பரிவர்த்தனை சேவை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணி தொடங்கப்பட்டதை அறிவிக்கும் நிகழ்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் தலைமை தாங்கினர்.
யுபிஐ மற்றும் பே நௌ தளங்கள் இணைக்கப்பட்டதால், சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையிலான பரிவர்த்தனைகள் எளிதாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் கைப்பேசி எண்ணைக் கொண்டு, இருநாட்டு வங்கிகளுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் போது ஏற்படக்கூடிய கூடுதல் செலவு மற்றும் நேரம் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை, தொழில் நுட்பத்தால் கிடைத்துள்ள மிகப்பெரிய நன்மையாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.