இலங்கையில் இந்தியாவின் கடன் உதவியுடன் ரயில்வே திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. அனுராதபுரம் முதல் மாஹோ வரை ரயில் பாதை அமைத்து, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மதிப்பு 91.27 மில்லியன் டாலர்கள், அதாவது 758 கோடி ரூபாய் ஆகும். இந்தியா, இந்த திட்டத்திற்கு 318 மில்லியன் டாலர்கள், அதாவது 2643 கோடி ரூபாய் கடன் உதவி வழங்குகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இலங்கை போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அடுத்த 6 மாதங்களுக்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இந்த திட்டத்திற்கு கடன் உதவி வழங்கியதன் மூலம், இந்தியா, இலங்கையின் நீண்ட நாள் நட்பை வலுப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














