உகாண்டாவில், இந்திய தொழிலதிபர் குன்தஜ் படேல், அந்நாட்டு காவல் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அவருக்கு 24 வயது ஆகிறது. அவரை 21 வயதுடைய எலியோடா குமிசாமு என்ற காவலர் சுட்டுக் கொன்றுள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி, மதியம் சுமார் 2 மணி அளவில், படேல் நடத்தி வரும் ஹார்டுவேர் கடைக்குள் நுழைந்த அவரும், அவரது கூட்டாளிகளும், குன்தஜ் படேலின் மார்பில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன் பின்னர், தப்பியோட முயன்ற போது, குமிசாமு மட்டும் சிக்கிக் கொண்டார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களைத் தேடி வருவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குன்தஜ் படேலின் ஹார்டுவேர் கடையில் பணி செய்து வந்த கில்பர்ட் மியூசெனிசா என்ற பணியாளர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக உள்ளார். அவரது கூற்றுப்படி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ள குமிசாமுவிடம் கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உகாண்டாவில் வெளியாகும் டெய்லி மானிட்டர் என்ற நாளிதழில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.