கிர்கிஸ்தானில் பயிலும் இந்திய மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் எகிப்திய மற்றும் கிர்கிஸ்தான் மாணவர்களிடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள சில விடுதிகள் தாக்கப்பட்டன. இதில் வெளிநாட்டு மாணவர்களும் தாக்கப்படுகின்றனர். இதையடுத்து கிர்கிஸ்தானில் பயிலும் இந்திய மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதே போன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளும் தங்கள் மாணவர்களை எச்சரித்துள்ளன. கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் இந்திய மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் எண்ணை வழங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிஷ்கேக்கில் உள்ள இந்திய மாணவர்களை கண்காணித்து வருவதாக உறுதியளித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து தாக்கிய இந்த வன்முறை சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.