சந்திரனை ஆராயும் விண்கலங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் சந்திரயான்-2 மற்றும் தென் கொரியாவின் டானுரி விண்கலங்கள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கமான சந்திப்பு இதற்கு உதாரணமாகும். சந்திரனின் துருவப் பகுதிகளை ஆய்வு செய்யும் பல விண்கலங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சுற்றுப்பாதைகளைப் பயன்படுத்துவதால் இந்த மோதல் அபாயம் அதிகரித்துள்ளது.
தென் கொரியாவின் டானுரி விண்கலம் மட்டும் கடந்த 18 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட மோதல் எச்சரிக்கைகளைப் பெற்றுள்ளது. இந்த அபாயத்தைத் தவிர்க்க பல முறை தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் தங்களது விண்கலங்களை பாதுகாக்க ஒத்துழைத்து வருகின்றன. ஆனால், சந்திரனில் விண்கலங்கள் மோதாமல் தடுக்க ஒரு விரிவான திட்டம் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.