இந்தியாவில், கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்த எரிபொருள் தேவை 24 வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது எரிபொருள் தேவை உச்சத்தை தொட்டுள்ளதாக, இந்தியாவின் எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் துறைசார் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில், எரிபொருள் நுகர்வு ஒரு நாளைக்கு 4.82 மில்லியன் பேரல்கள் அளவிற்கு பதிவாகியுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 5% க்கும் கூடுதலாகும்.
வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகிய அனைத்து எரிபொருட்களின் விற்பனையும் பிப்ரவரி மாதம் உயர்ந்துள்ளது என்பது அரசாங்க தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் தேவை, வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.