இந்தியாவில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளன. இதனால், இந்திய குடும்பங்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் விழாக்காலம் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே இத்தகைய சூழல் எழுந்துள்ளதால், கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 1.48 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளன. மத்திய ரிசர்வ் வங்கி இந்த தகவலை உறுதி செய்துள்ளது. எனவே, இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள், கிரெடிட் கார்டுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள வங்கி கடன்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இது பாதிக்கலாம் என எச்சரித்துள்ளனர். அத்துடன், இந்திய குடும்பங்களின் கடன் சுமை பெருமளவு அதிகரிக்க கூடும் என கூறியுள்ளனர்.