மறைமுக விலை உயர்வை ஆவின் நிறுவனம் கைவிட வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 10 மாதங்களில் மட்டும் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க., அரசு தற்போது புதுவித விலை உயர்வை செயல்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆவின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு, 12 ரூபாய்; ஆவின் வெண்ணெய் லிட்டருக்கு, 20 ரூபாய்; நெய் லிட்டருக்கு, 50 ரூபாய் உயர்த்திய அரசு, மீண்டும் புதிய முறையிலான விலை உயர்வை செயல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.
கடந்த ஆண்டு பால் விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி., தான் காரணம் என்று பால் வளத்துறை அமைச்சர் நாசர் பொய் சொன்னார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து 25 சதவீத விலை உயர்வை மக்கள் தலையில் அரசு சுமத்தி உள்ளது. எனவே மறைமுக விலை உயர்வை கைவிட்டு நிறுவனத்தை மக்களுக்கு பயன்படும்படி நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.