சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக இந்தோனேசியாவின் பாலி தீவு உள்ளது. எனவே, அதனை வைத்து, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய விசா திட்டங்களை இந்தோனேசியா அறிமுகப்படுத்தியுள்ளது. “இரண்டாவது வீடு” விசா (Second Home Visa) என்ற புதிய 5 ஆண்டு கால விசா தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வங்கிக் கணக்கில் இரண்டு பில்லியன் இந்தோனேசிய ரூபாய் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகால விசா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் இந்த விசா நடைமுறை அமலுக்கு வரும் எனவும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய தூதரக செயல் அதிகாரி விடோடோ ஏக்கச்சானா, “இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய பொருளாதார உயர்வுக்கு பங்களிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு இது நல்லதொரு வாய்ப்பாகும்” என்று கூறியுள்ளார். பணக்கார வெளிநாட்டினருக்கு நீண்ட கால விசா வழங்குவதன் மூலம், கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளின் வரிசையில் இந்தோனேசியா இணைந்துள்ளது. முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு, “டிஜிட்டல் நாடோடிகள்” (Digital Nomad) என்ற பெயரில் புதிய விசாவை பாலி தீவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்தோனேஷியா வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணமாக இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுலா துறை இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல், பாலி தீவுக்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் வரவேற்கப்பட்டனர். இதன் மூலம், உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என்று கருதப்பட்டது. தொடர்ந்து, சுற்றுலா துறையில் இருந்த பல கட்டுப்பாடுகளை இந்தோனேசிய அரசு தளர்த்தியது. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட 72 நாடுகளுக்கு மார்ச் 7ம் தேதி முதல் “வருகை விசா” வை (Visa on Arrival) இந்தோனேஷியா வழங்கி வருகிறது. தற்போது, இந்த நீண்ட கால விசா அறிவிப்பு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.