பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சிலரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்ற சிலரும் பதிவு செய்துள்ளனர். எதுவாக இருந்தாலும் அவர் வாழ்ந்த ஊரின் பெயரே தான் அவர் பெயராக நிலைத்துவிட்டது. இடைக்காடு இடையர் குடியிலே பிறந்தவர் என்பதால் அவர் அதனாலேயே இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவர் பிறந்த நட்சத்திரம் புரட்டாசி மாதம் திருவாதிரை.
இடைக்காடர் சித்தரின் தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. கல்வியறிவு கொஞ்சமும் இல்லை. ஆனாலும் ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் இப்படி குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சேர்த்து சிரமத்தைத் பெற்றுத் தருகின்றனவே!
இறைவா! இந்த ஆடுகளின் சுபாவத்தை போலவே தானே, பல மனிதர்களின் சுபாவமும் இருக்கிறது என்பதைப் எனக்கு புரிய வைக்கிறாயா! என்றும் இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் கொண்டு சேர்ப்பது போல், மனித உயிர்கள் எல்லோரையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியையே கொடுத்துள்ளாயா? என கேட்டார்.
இந்த கேள்விகளுக்கான விடைகளை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டுவிட்டு, தன் கையில் வைத்ததிருக்கும் கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருந்தார். சிவபெருமானிடம்! தன் கேள்விக்கு விடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
நீண்ட நாள் தவப் பலனாக ஒருநாள், இடைக்காடர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமன ஒளி இடைக்காடர் சித்தரின் உடலில் பாய்ந்தது.அதே நேரத்தில் திடீரென அசரீரி ஒன்றும் ஒலித்தது. அந்த அசீரிரி சேவை... இதுவே மனிதன் இறைவனை எட்டுவதற்கான ஒரே வழி... பிறருக்கு சேவை செய். அதற்குரிய பலனைக் பெறு மகனே! என்று கூறி பல சக்திகளை தந்தது.
போகரையும் சந்தித்து அவர் மூலமும் இறைவன் சிவன் அருளாலும் இடைக்காடர் சித்தர் பல ஞானங்களை பெற்று எண்ணியதை எல்லாம் செய்ய இயலும் சக்தியை பெற்றார். முக்காலத்தை உணர்ந்தார். பல ஞானநூல்கள் எழுதினார். மனிதனின் துயரங்களுக்கு அடிப்படையாக காலம் செயல்படுவதை கண்டறிந்து அதனை விளக்கும் விதமான வருஷாதி என்னும் நூலை இயற்றினார். இப்பொழுது அந்த நூல் பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.
ஒரு தடவை அவர் தியானத்தில் இருந்த போது, நாட்டில் 12 ஆண்டுகள் கொடும் பஞ்சம் வரப்போவதை முன்பே கணித்தார். இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிய போகிறதே என வருந்தி, சிந்தித்து தன் ஆடுகளுக்கு எருக்க இலைகளை பறித்துப் போட்டார். கேழ்வரகு தானியத்தை மண்ணுடன் சேர்த்து குழைத்து, ஒரு குடிசை கட்டினார்.
ஊர்மக்கள் இவரது செய்கையை விசித்திரமாகப் பார்த்தனர். இடைக்காடருக்கு மனநலம் பாதித்து விட்டது. எவனாவது நச்சு தன்மையுள்ள எருக்க இலைகளை ஆடுகளுக்கு பறித்துப் போடுவார்களா? அதோடு, கேழ்வரகைக் குழைத்து வீடு கட்டுவார்களா? என்று பேசினார்கள், தங்கள் ஐயம் தீர இடைக்காடரிடமே விளக்கம் கேட்டார்கள்.
விரைவில் கொடும் பஞ்சம் வரப்போகிறது. என்றும் அப்படி வரும் போது அந்த பஞ்சகாலத்தில், பச்சிலைகளுக்கு எங்கே போவது? எனவே, ஆடுகளுக்கு கடும் கோடையிலும் காயாத எருக்க இலைகளை சாப்பிட பழக்குகிறேன், என்றதும், ஊரே இடைக்காடரை பார்த்து சிரித்தது.
ஆனால் அவர் சொன்னது போலவே, சில மாதங்களிலேயே நாடு முழுவதும் கடும் வறட்சி சூழல் தொடங்கியது. பல மாதங்கள் வானத்தில் மழை பெய்யவில்லை ஓரு வருடம், இரண்டு வருடம் என்று வறட்சி காலம் நீடித்து கொண்டே இருந்தது. பயிர்கள் எல்லாம் அழிந்தது.பசி பட்டினியால் பலரும் இறந்தனர்.
மக்கள் வளர்த்த கால்நடைகள் எல்லாமும் கூட மெலிந்து எலும்பும் தோலாகிவிட்டன. இடைக்காடர் வளர்த்த ஆடுகள் மட்டும் எருக்க இலையைச் சாப்பிட பழகி கொண்டிருந்ததால், உயிர் பிழைத்துக் வாழ்ந்தன. ஆனால், அந்த இலையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டுக் கொண்டார் இடைக்காடர் சித்தர்.
தண்ணீர் பற்றாக்குறை வேறு இருந்ததால், தான் குடியிருந்த வீட்டின் அருகிலேயே இடத்தை கண்டறிந்து அங்கு ஓரு ஆழமான பகுதியில் ஊற்று ஒன்றை முன்னமே தோண்டி வைத்திருந்தார். அதிலிருந்து கிடைக்கிற தண்ணீரைக் கூட மிகவும் சிக்கனமாக செய்து கொண்டார். அந்த சமயத்தில் தான் வானுலகில் இருந்து நவக்கிரகங்கள் மண்ணுலகில்தாங்கள் ஏற்படுத்திய வறட்சி நிலை சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வந்தனர்.
ஆனால் இடைக்காடர் சிறப்பாக கேப்பைக்கூழ் காய்ச்சி உண்பதை கண்டும், அவரின் ஆடுகள் எவ்வித சிக்கலும் இல்லாமல் உலாவுவது கண்டும் வியந்தார்கள். சூழ்நிலைகளை தன் அறிவால் வெற்றி கொண்ட இடைக்காடருக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக அவரது குடிசைக்கு வந்தனர்.
கிரகங்களை அவர் குடிசையில் ஒரு இரவு தங்க கோரிக்கை வைத்து.அவர்களுக்கு உணவளித்து உறங்க வைத்து அவர்கள் உறங்கும் போது மழை பெய்யும் இந்த சம்பவத்தை அறிந்த மக்கள், இடைக்காடரை நோக்கி வந்தனர். தங்களைக் காப்பாற்றியமைக்காக நன்றி கூறினர்.
முன்பு தன்னை நம்பாத மக்கள், இப்போது நம்புவதால் என்ன அர்த்தம் இருக்கிறது? இவர்கள் நேரத்திற்கு நேரம் தங்கள் நடைமுறையையும், பேச்சையும் மாற்றுபவர்களாக அல்லவா இருக்கிறார்கள்? என்று எண்ணி வருந்தினார். இருப்பினும் அவர் மக்களுக்காக இறுதிவரை சேவைகளையே தான் செய்து வந்தார்.
இடைக்காடர் கொங்கணர் சித்தரின் சீடர் என்று சில குறிப்புகள் உள்ளது. இவர் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என கூறுகின்றனர். இல்லை அதற்கும் முன்பே சங்க காலத்தை சேர்ந்தவர் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இவரது பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற ஒரே நூலிலே இடம்பெற்று உள்ளன. இவர் பற்றி ஜனன சாகரம் 500 என்ற நூலில் சித்தர் போகரும் கூட எழுதியுள்ளார்.
பல நூல்கள் இருந்தாலும் இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிக மிக சிறப்பு வாய்ந்தது என அறிஞர்கள் பலரும் கூறுகின்றனர்.இவர் வாழ்ந்த மொத்த காலம் 600 ஆண்டுகள் 18 நாட்களாகும்.
இடைக்காடர், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரிலேயே சமாதியானார் என்றும் இல்லை அவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் ஜீவ சமாதியடைந்தார் எனவும், திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாகவும், ஜனன சாகரத்தில் சமாதியடைந்தாரென்றும் பல விதமாக கூறுகிறார்கள்.
இன்றும் வருடா வருடம் தவறாமல் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் இடைக்காட்டு சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு மாபெரும் குரு பூஜையும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.சித்தர்கள் ஆசி அற்புதமானது இடைக்காடர் தன்னை மனமுருகி நினைத்து வேண்டும் அனைவருக்கும் அதை சமமாக அளிக்கிறார்.