தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கம்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும்.
தற்போது இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள் - 1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள் - 2 ஸ்பீடு என்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையை ரத்து செய்து 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் முறைப்படியே இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
மேலும், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.