பஞ்சாப்பில் நாளை மதியம் வரை இணையதள, எஸ்.எம்.எஸ். சேவை முடக்கபட்டுள்ளது.
வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை தற்போது, அம்ரித்பால் சிங் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான, ஆள் கடத்தல், மிரட்டல் வழக்கில் குற்றவாளியான லவ்பிரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க கோரி, அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி உள்ளே புகுந்தனர். அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் காணப்பட்டனர். அவர்களை தடுக்க முற்பட்ட காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு அம்ரித்பாலை கைது செய்ய தீவிரப்படுத்தப்பட்டது. அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தொடர்ந்தது. எனினும், பாதுகாப்பு வாகனங்கள் சூழ ஜலந்தரின் ஷாகோட் பகுதியை நோக்கி சென்ற அவர், கடைசியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
இந்நிலையில் பஞ்சாப்பில் பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அனைத்து மொபைல் போன் வழியேயான இணையதள சேவைகள், எஸ்.எம்.எஸ். சேவைகள் மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் வழியேயான அனைத்து சேவைகளும் முடக்கபட்டுள்ளது. நாளை மதியம் 12 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.