2000 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. மேலும், ஈரான் நாட்டின் அரசாங்க ஊடகத்தில், ஏவுகணை சோதனை காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரை, ஈரான் அணு ஆயுத சோதனைகளில் முன்னணியில் உள்ளது. மேலும், ஈரானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள், இஸ்ரேல் மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள அமெரிக்க மையங்களை தாக்கும் அளவிற்கு திறன் வாய்ந்ததாக கூறப்படுகின்றன. ஈரானின் அணு ஆயுத சோதனைக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இன்று நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது குறித்து, ஈரான் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமதுரைசா அஷ்டியாணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், “இந்த ஏவுகணை சோதனை, ஈரானின் எதிரிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். அதே வேளையில், எங்கள் நட்பு நாடுகளுக்கு, நாங்கள் தரும் பாதுகாப்பு உறுதி ஆகும்” என்று கூறியுள்ளார்.