புதுடில்லி, ஏப்ரல் 29, 2022:
தற்போது இந்தியாவில், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு ஒன்பது மாத காலம் நிறைவடைந்த நபர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், சமீபகாலமாக, நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. எனவே, இதுகுறித்து, Indian Medical Association இன் துணைத்தலைவர் டாக்டர். ராஜீவ் ஜெயதேவன் பேசியபோது, “எங்களின் ஆராய்ச்சி படி, இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்ட சிறிது காலத்திலேயே ஒருநபர் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டால், அதில் பெரிதும் மாற்றம் நிகழவில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஆறு மாத காலம் இடைவெளியுடன் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் நல்ல மாற்றங்கள் உணரப்பட்டது. தொற்று பாதிப்பு மற்றும் தொற்றின் தீவிரத்தன்மை குறைந்து காணப்பட்டது” என்று கூறினார். அத்துடன், தற்சமயத்தில் தொற்று பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதற்கு, “பெரும்பாலான மக்கள், வைரஸ் ஒழிந்து விட்டதாகத் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்றும், “வைரஸ் நம்மிடையே தான் உள்ளது; அதை மக்கள் உணர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார். ஏற்கனவே, Tata Institute for Genetics and Society (TIGS) இன் நிர்வாகத் தலைவர் டாக்டர். ராகேஷ் மிஸ்ரா, பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியை 6 மாதமாகக் குறைக்கும் படி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் 5 முதல் 6 மாத கால இடைவெளியில் மூன்றாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.