அண்மையில், ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து, ரயில் பயணங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. இந்நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில், ஒவ்வொரு ரயில் பயணத்திற்கும் காப்பீடு வழங்கப்படுவது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என கூறப்படுகிறது. ஏனெனில், ஒடிசா ரயில் விபத்தில், ரயிலில் பயணித்தவர்களில் குறைவான மக்களே காப்பீடு பெற்றிருந்தனர். ஒருவேளை, ரயிலில் பயணித்த அனைவரும் காப்பீடு பெற்றிருந்தால், அனைவரின் குடும்பத்தினரும் பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் ஆகியவற்றின் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு, பயணத்திற்கான காப்பீடு வழங்கப்படுகிறது. வெறும் 35 பைசாவில், 10 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. காப்பீட்டின் தொகை மிக மிகக் குறைவு என்பதால், ரயில் பயணிகள் இந்த காப்பீட்டை பெறுவது மிகவும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மேலும், நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டாலும் 10 லட்சம் வழங்கப்படும். காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது. இது, 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. காயங்கள் கூடுதலாக ஏற்பட்டு, பகுதி உடல் ஊனம் ஏற்பட்டால், 7.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல 10000 ரூபாய் கொடுக்கப்படும். காப்பீட்டுத் தொகை யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த விவரங்களை ரயில் பயணச்சீட்டு முன்பதிவின் போது பதிவிட வேண்டும்.