ஹிஸ்புல்லா குழு போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் குழுவினர் கடந்த திங்கள் அன்று இஸ்ரேலில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் செய்வதில் தீவிரம் காட்டியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் கிவீர் கூறியுள்ளார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களை அழிக்க கடும் போரில் ஈடுபடுவோம்.அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து இஸ்ரேல் நிதி அமைச்சர் ஸ்மார்ட்ரிச் கூறியதாவது, தெற்கு லெபனானின் கலிலி பகுதிக்கு தரைவழி தாக்குதல் மூலம் முன்னேறி அங்கு உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை விரட்ட வேண்டும் என்றார்.
இதற்காக பொதுமக்கள் அனைவரையும் லீடாணி நதிக்கு அப்பால் இடம்பெயரச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நதி இஸ்ரேல் எல்லையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஹிஸ்புல்லா குழு போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசீம் கூறுகையில், நாங்கள் இஸ்ரேலுடன் முழு போர் செய்ய விரும்பவில்லை. அதே சமயத்தில் அத்தகைய போர் வரும் பட்சத்தில் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். இந்த போரை இஸ்ரேல் விரிவுபடுத்தினால் மிகப்பெரிய அழிவை அந்த நாடு சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.