இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பலி எண்ணிக்கை இதுவரை 1600 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாங்கள் இந்த முறை யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால் பேச்சுவார்த்தை செய்வதற்கான நேரம் இது இல்லை. நாங்கள் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சி செய்கிறோம். இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் யாராவது இருக்கிறார்களா என்று கண்டறிந்து வருகிறோம். இந்தப் பகுதியில் காயமடைந்து இருப்பவர்களை மீட்டு வருகிறோம். காசாவை எங்களுடைய கட்டுப்பாட்டுகள் கொண்டு வருவது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இஸ்ரேல் அரசு பாதுகாப்பு படை உதவியுடன் காசா முனையில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். குடிமக்களை பாதுகாக்கும். ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் குடிமக்களைத் தாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.